தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
இதில் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. இவர் புஷ்பா-2 திரைப்படத்துக்காக இவ்விருதினை பெற உள்ளார். சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் (35 இதி சின்ன கத காது) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘35 இதி சின்ன கத காது’ படத்தை நந்தா கிஷோர் இயக்கி இருந்தார். இதில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இதற்காக இவர் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வந்த நிவேதா தாமஸின் உடல் பருமனான தோற்றத்தை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் அவரை கடுமையாக உருவகேலி செய்து வந்தனர்.
மேலும் சிலர் அவருக்கு உடல்நலப் பிரச்சினை காரணமாகவே அவரது எடை கூடியுள்ளதாக அவதூறாக பதிவிட்டனர். இன்னொரு புறம் நிவேதாவுக்கு ஆதரவாகவும் பலர் நின்றனர். இத்தகைய விமர்சனங்களை புறந்தள்ளி ‘35 இதி சின்ன கத காது’ படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். உருவகேலிகளுக்கு அவர் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
இந்த நிலையில், தற்போது சிறந்த நடிகைக்கான தெலங்கானா அரசின் விருதை வென்றதன் மூலம் வசவாளர்களின் வாயை அடைத்துள்ளார் நிவேதா தாமஸ்.
இன்னொரு புறம், 2024-ல் வெளியான கல்கி 2898 திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக இப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2-வது சிறந்த திரைப்படமாக பொட்டேல், 3-வது சிறந்த திரைப்படமாக லக்கி பாஸ்கர் திரைப்படமும் தேர்வாகி உள்ளது. சிறந்த துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா (சரிபோதா சனிவாரம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.