‘பார்க்கிங்’ இயக்குநர் – சிம்பு இணையும் படத்தின் நிலை என்ன என்பதுதான் தற்போதைய திரையுலகினர் பேச்சாக இருக்கிறது.
‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. அதற்கு பின்பு அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இதனால் அவர் தயாரிக்கும் ‘பராசக்தி’, ‘இதயம் முரளி’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 49’ உள்ளிட்ட படங்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, இப்போதைக்கு வெற்றிமாறன் இயக்கும் படம் தான் தனது 49-வது படம் என்று சிம்பு முடிவு செய்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்தபின்பு தான், ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் படத்தின் நிலை என்ன என்பது தெரியவரும். ஆனால், இப்போதைக்கு உடனடியாக சிம்புவால் தேதிகள் ஒதுக்க முடியாது.
ஆகையால், ராம்குமார் இயக்கும் படம் சிம்பு நடிப்பில் உருவாகும் 51-வது படமாக இருக்கலாம் அல்லது 52-வது படமாக இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்துக்காக வாங்கப்பட்ட நடிகர்களின் தேதிகள் அனைத்தும் வீணாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.