டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் சிக்கலின்றி வெளியாகுமா என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது.
ஜூலை 24-ம் தேதி பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பணிகள் முடிவடையாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 24-ம் தேதி படம் வெளியாவதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு எதிராக இருவர் தெலங்கானா பிலிம் சேம்பரில் புகார் அளித்திருக்கிறார்கள்.
‘ஆக்சிஜன்’ படத்துக்காக வாங்கிய ரூ.2.60 கோடி பணத்தினை வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும் என்று ஏசியன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. ‘முதுலா கொடுக்கு’ மற்றும் ‘பங்காரம்’ படங்களுக்காக ரூ.90 லட்சம் தர வேண்டும் என்று மகாலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. இது தவிர்த்து பலரும் ஏ.எம்.ரத்னத்துக்கு வழங்கிய பணத்தை திரும்ப பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே வேளையில், படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 21-ம் தேதி பவன் கல்யாண் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்கும் பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.