‘லோகா’ படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியிருக்கிறது படக்குழு. இதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இப்படத்தில் நடன இயக்குநர் சாண்டி பேசிய வசனம் ஒன்று கன்னடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கி, வருத்தம் தெரிவித்துள்ளது படக்குழு.
இது தொடர்பாக வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் “லோகா: சாப்டர் 1” திரைப்படத்தில் உள்ள ஒரு கதாபாத்திரம் பேசிய ஒரு உரையாடல் கர்நாடக மக்களின் உணர்வுகளை தவறுதலாக பாதித்துவிட்டது என்பதை எங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எங்களது நிறுவனத்திற்கு மக்களின் உணர்வுகளே முக்கியம். ஆகையால் இந்த தவறை மிகுந்த வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் எவ்விதமான பகைமையோ, குற்றமோ இல்லாமல் இந்த உரையாடல் இடம்பெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த உரையாடல் விரைவில் நீக்கப்படும்.
இதற்கு மனமார்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை ஏற்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Lokah pic.twitter.com/q18SX8dh7G
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 2, 2025