சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.
’பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிகிறது.
ஏனென்றால் சசி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இதனை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியீடு எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் விஜய் ஆண்டனியுடன் லிஜோ மோல் ஜோஸ், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்கு முன்னதாக ஜோஸ்வா சேதுராமன் இயக்கி வரும் ‘லாயர்’, ‘எமகாதகி’ இயக்குநர் பெப்பின் இயக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.