லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமீர்கான் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் ஆமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வசூல் செய்தாலும் கூட சமூக வலைதளங்களில் ட்ரோல்களுக்கு ஆளானது.
இப்படத்தைத் தொடர்ந்து ஆமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். இது தனது கனவுத் திரைப்படம் என்றும் கூறியிருந்தார். ‘சித்தாரே ஜமீன் பர்’ இந்திப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இதனை ஆமீர்கான் உறுதி செய்தார். “லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.
ஆனால் இப்படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ‘கூலி’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தை இயக்க இருப்பதாக லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் திடீரென ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கும் ஒரு படத்தை லோகேஷ் இயக்க இருப்பதால் ‘கைதி 2’ படம் தாமதமாகும் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் ஆமீர்கான் படம் கைவிடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் லோகேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் தேதிகள் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனுமா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.