நாயகனாக அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தகவலாக வெளியானாலும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையே, நாயகனாக அறிமுகமாக இருப்பது குறித்து லோகேஷ் கனகராஜ், “அன்பறிவ் இயக்கத்தில் நானும் அனிருத்தும் இணைந்து பண்ணுவதாக இருந்தது. ஆனால், நேரம் சரியாக அமையவில்லை. இப்போது அன்பறிவ் இயக்கத்தில் கமல் சார் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பலர் கதைகள் கூறிக்கொண்டே இருந்தார்கள். அவற்றை எல்லாம் வேண்டாம் என்று கூறிவந்தேன்.
எனது நண்பன் அருண் மாதேஸ்வரன். அவன் நடிக்க ஆசையிருக்கிறதா என்று கேட்டான். ஏதாவது ஆக்ஷன் படம் செய்து பார்க்கலாம் என்ற எண்ணமிருப்பதாக சொன்னேன். அவன் இளையராஜா பயோபிக் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தள்ளிப்போனது. எனக்கும் ’கைதி 2’ தொடங்க 8 மாதங்கள் இடைவெளி இருந்தது. உடனே அவனை அழைத்துப் பேசினேன். அப்போது அவன் கூறிய ஒரு கேங்ஸ்டர் கதையில் தான் நடிக்க இருக்கிறேன். அதற்காக உடம்பை எல்லாம் குறைத்து, ஷேவிங் பண்ணாமல் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.