சென்னை: நடிகர் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கு கீழானவர்கள் ‘கூலி’ படத்தை பார்க்க முடியவில்லை என்பதால், படத்துக்கு யு/ஏ சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி, சன் டிவி நெட்வொர்க் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சன்டிவி நெட்வொர்க் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘எந்த தமிழ் படங்களிலும் அதிகப்படியான சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மது காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன’ என வாதிட்டார்.
சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக் கொண்ட படக்குழு தற்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு, யு/ஏ சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.