‘குபேரா’ படத்தில் தான் தான் நாயகன் என உணர்வதாக நடிகர் நாகர்ஜுனா பேசியது இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் தயாரிப்பாளர் சுனில், நாகார்ஜுனா மற்றும் இயக்குநர் சேகர் கமுல்லா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நாகர்ஜுனா பெரும் மகிழ்ச்சியுடன் பேசினார். “இப்படத்தில் நான் தான் நாயகன் என உணர் கிறேன். ஏனென்றால், இக்கதை முழுக்கவே எனது கதாபாத்திரத்தை சுற்றித்தான் நிகழ்கிறது” என்று நாகர்ஜுனா தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு தனுஷ் ரசிகர்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘குபேரா’ படத்தில் நாகர்ஜுனா கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். ஆனால், தனுஷ் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது என்று கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும், பட வெளியீட்டு முன்பு “இது சேகர் கமுல்லாவின் படம்” என்று பேசியவர், இப்போது படம் வெற்றியடைந்த உடன் நான் தான் நாயகன் என்கிறார் என்றும் நாகர்ஜுனாவை தனுஷ் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.