‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி தொடர்பாக கங்கை அமரன் கருத்துக்கு பிரேம்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்கள் உபயோகப்படுத்தி இருப்பது தொடர்பாக தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பேசும் போது கங்கை அமரன், “7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் உருவாக்கிய பாடல்களை விட, எங்களுடைய பாடல்களுக்கு தான் கைதட்டல்கள் அதிகமாக விழுகிறது. அது தான் வெற்றிக்கு காரணம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவரது மகன் பிரேம்ஜி, “அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்பதால் அப்பா பேசியிருக்கிறார். எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானும் பேசுவேன் அல்லவா. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு முழுக் காரணமும் அஜித் சார் மட்டும் தான். அது தான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், சிம்ரன், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார். இப்படம் அஜித் படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த ஒன்றாகியுள்ளது.