
துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர். இதற்கு முன்பு அவரது நேரடி தமிழ்ப் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ அவருக்கு தமிழில் ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு அவர் மறுபடியும் நடித்திருக்கும் நேரடி தமிழ்ப் படம்தான் ‘காந்தா’.
படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. கட் செய்தால் மாடர்ன் ஸ்டுடியோஸ் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திர விஜய்), அய்யா என்று அனைவராலும் மதிக்கப்படும் இயக்குநரிடம் (சமுத்திரக்கனி) ஏற்கெனவே படப்பிடிப்பு நடந்து பின்னர் கைவிடப்பட்ட தன் படத்தை மீண்டும் எடுக்கலாம் என்று கூறுகிறார். அந்த காலகட்டத்தில் நடிப்புச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் உச்ச நட்சத்திரமான டி.கே.மகாதேவனுக்கும் (துல்கர் சல்மான்) அய்யாவுக்கும் இடையே நடந்த ஈகோ மோதலே அப்படம் ட்ராப் ஆன காரணம். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

