கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவம் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு:
பிரபுதேவா: கரூரில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு சம்பவத்தால் வருத்தமடைந்தேன். குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகளும், ஆழ்ந்த இரங்கலும்.
கங்கனா ரனாவத்: தமிழ்நாட்டின் கரூரில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிர் இழப்பைக் கேள்விபட்டு வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
கார்த்தி: கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்
விஷ்ணு விஷால்: இந்தச் செய்தியைக் கேட்டு வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ராகவா லாரன்ஸ்: கரூரில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பா.ரஞ்சித்: கரூர் பெரும் துயரம் நெஞ்சை பதற வைக்கிறது! தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை பற்றி அறிந்து பெரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைகிறேன்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
கார்த்திக் சுப்பராஜ்: தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். கரூர் நெரிசல் சோகம் நெஞ்சை உலுக்குகிறது!
மாரி செல்வராஜ்: கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. இந்த இரவையும் இந்த பேரிழப்பையும் எப்படி கடப்பது …கண்ணீர் முட்டுகிறது.
ஹரிஷ் கல்யாண்: கரூரில், உயிர்கள் இழந்த துயரச் செய்தி மனதை பதற வைக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
சிபிராஜ்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்ததால் மனம் உடைந்துவிட்டது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கிறேன்.