தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார்.
ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில் ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் நீண்டநாட்களாக மவுனம் காத்து வந்த ஆர்த்தி ரவி, முதல்முறையாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “எனது விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் யாரது அருகில் காதலுடன், நம்பிக்கையுடன், உண்மையுடன் நின்றேனோ, அவர் என்னைவிட்டு விலகிச் சென்றுள்ளார். என்னை மட்டும் விட்டு விலகிச் செல்லவில்லை, எனக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் துறந்து சென்றுள்ளார்” என்று தனது ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் பகிர்ந்திருந்தார்.
ஆர்த்தியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. ஆர்த்திக்கு ஆதரவாக ஒரு தரப்பும், ரவிக்கு ஆதரவாக ஒரு தரப்பும் தங்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர். இந்தச் சூழலில் முன்னணி நடிகைகளான குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் ஆர்த்திக்கு தங்கள் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
ஆர்த்தியின் அறிக்கையை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, “ஒரு தாயின் உண்மை எதிர்வரும் நாட்களில் ஒரு சாட்சியாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில் எதிர்மறையாக கமென்ட் செய்தவர்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்து வருகிறார். அதே போல நடிகை ராதிகாவும் ஆர்த்தியின் அறிக்கையை தனது பக்கத்தில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஆர்த்தி கூறியது என்ன? > “உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது!” – ஆர்த்தி ரவி பகிரங்க பதிவு