சிம்புவின் 50-வது படம் தாமதமாவதால், மணிகண்டன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் தேசிங்கு பெரியசாமி.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் 50-வது படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இதன் பணிகள் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இதற்காக நீண்ட வருடங்கள் காத்திருந்தார் தேசிங்கு பெரியசாமி.
தற்போது சிம்புவின் 50-வது படத்துக்கு முன்பாக, மணிகண்டன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் தேசிங்கு பெரியசாமி. இதன் தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு. குறுகிய கால தயாரிப்பாக ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளார்கள்.
வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் கதைகளில் நடிக்கவுள்ளார். இதில் எது முதலில் தொடங்கும் என்பது விரைவில் தெரியவரும்.