சென்னை: வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவி மோகன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, தனது தோழி கெனிஷா குறித்து நெகிழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்த விழா நடைபெறுவதற்கு முழு காரணம் கெனிஷா மட்டுமே. இதை முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே அவர் செய்தார். எனக்கு யாரும் அப்படி செய்ததே கிடையாது. இவ்வளவு பேர் வருவார்கள் என்றும் எனக்கு தெரியாது.
ரவிமோகன் ஸ்டூடியாஸ் நிறுவனத்தின் பார்ட்னராகவும் அவர் இருக்கிறார். ஒரு மனிதன் வாழ்க்கையில் ஓரிடத்தில் தடுமாறி நிற்கும்போது கடவுள் அப்போது ஒரு விஷயத்தை அவனுக்கு அனுப்புவார். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வாகனமாக இருக்கலாம். அப்படி எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா. நான் யார் என்று என்னை உணரவைத்தது அவர்தான். இதுபோன்ற ஒருவர் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” இவ்வாறு ரவி மோகன் தெரிவித்தார்.