இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த ‘நாளைய மனிதன்’ என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதைத் தொடர்ந்து ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கினார். பின்னர் ‘அசுரன்’, ‘ராஜாகிளி’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3,ரெய்டு, வெப்பன், கஜானா உள்பட பல படங்களில் நடித்தார்.
கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவர் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.திரைத்துறையினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை போரூரில் நடைபெறுகிறது. வேலுபிரபாகரன், முதலில் நடிகை ஜெயதேவியை திருமணம் செய்திருந்தார். பின்னர் கடந்த 2017-ம்ஆண்டு, தான் இயக்கிய ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படத்தில் நடித்த செர்லி தாஸை திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.