விஜய் மில்டன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது. ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக அறிமுகமானார். அதற்குப் பின் பல படங்களை இயக்கினாலும், முதல் படம் அடைந்த வெற்றி அளவுக்கு எதுவும் வெற்றியடையவில்லை.
தற்போது அடுத்து இயக்கவுள்ள படத்தை அறிவித்துள்ளார் விஜய் மில்டன். தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழிலும் நாயகனாக அறிமுகமாகிறார் ராஜ் தருண்.
இப்படம் குறித்து விஜய் மில்டன் கூறும்போது, “இந்தப் படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். ’கோலி சோடா’ பாணியை தொடர்ந்து, இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை இயக்கவுள்ளேன். ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் இருக்கிறார். தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கவுள்ளது படக்குழு.