தனது அடுத்த படத்தில் அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இதற்கான கதையினை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்துக்கு அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படம் தொடங்கி ‘கோட்’ வரை யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தான் படங்களை உருவாக்கி வந்தார். இவருடைய இயக்கத்தில் வெளியான ‘மன்மத லீலை’ படத்துக்கு மட்டுமே பிரேம்ஜி இசையமைத்திருந்தார். மற்ற அனைத்துக்குமே யுவன் தான் இசை.
வெங்கட்பிரபு எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணி என்ன என்பது விரைவில் தெரியவரும். முன்னதாக அளித்த பேட்டியொன்றில், வேறு இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிய வேண்டும் என்று தனது ஆசையினை வெங்கட்பிரபு வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.