ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை விளையாடுகின்றன. இந்நிலையில், இதில் யார் தோற்றாலும் ஹார்ட் பிரேக் நமக்கு தான் என இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், மும்பையின் பும்ரா மற்றும் போல்ட் வீசிய யார்க்கர்களை தேர்ட்மேன் திசையில் பவுண்டரி விளாசியது அருமை. அவர் டெல்லி அணியை முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். இருப்பினும் அந்த அணி அவரை தக்க வைக்கவில்லை.
கொல்கத்தா ஐபிஎல் அணிக்காக கோப்பை வென்று கொடுத்தார். இருப்பினும் டிராப் செய்யப்பட்டார். இப்போது இளம் வீரர்கள் அடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேற செய்துள்ளார். இந்த முறையும் கோப்பை வெல்வதற்கான தகுதி அவருக்கு உள்ளது. மறுபக்கம் விராட் கோலி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிர கணக்கில் ரன் சேர்க்கிறார். அவரும் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்ல தகுதியானவர். மொத்தத்தில் வீழ்வது யாராகினும் ஹார்ட் பிரேக் நமக்குதான்” என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 2) நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் இதுவரை ஐபிஎல் பட்டம் வெல்லாத ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.