ஹைதராபாத்: பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி ஆந்திர, தெலங்கானா மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
ஜோதி கிருஷ்ணா இயக்க பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘ஹரிஹர வீரமல்லு’. இதில் நிதி அகர்வால், அனுபம் கெர், பாபி தியோல் நர்கிஸ் ஃபக்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஜூலை 25 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்துக்கான டிக்கெட் விலையை உயர்த்தி அம்மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இப்படத்தின் ப்ரீமியர் சிறப்புக் காட்சி ஜூலை 23 திரையிடப்படுகிறது. இந்த காட்சிக்கான தொகை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 24 முதல் 27 வரை மல்டிப்ளெக்ஸ் திரையரங்க டிக்கெட் ரூ.200 என்று ஒற்றை திரை திரையரங்க டிக்கெட் ரூ.150 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி ஆந்திர, தெலங்கானா அரசுகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதங்களால் பட்ஜெட் அதிகமாகிவிட்ட நிலையில், டிக்கெட் விலை உயர்வு படத்தின் வசூலை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.