திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன், இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விரிவான உள்ளடக்கத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, சென்னையின் ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் எல்லிஸ் பிரபு அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், தேர்ந்தெடுத்த திருக்குறள்களை விளக்கும் கிராஃபிக்ஸ் விவரணைக் காட்சிகள், குறும்பட வடிவில் காமத்துப்பால் காட்சிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் இந்த ஆவணப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். தயாரிப்பில் உறுதுணையாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் படத்தை இயக்கியுள்ளார். வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்துகிறது.

