பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் தோல்வி குறித்த கேள்வி சந்தானத்திடம் எழுப்பப்பட்டது. அதற்கு சந்தானம், “அப்படத்தின் கதையை படித்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போதே, இப்படம் ஃப்ளாப் என்று ராஜேஷ் சாரிடம் கூறினேன்.
கரீனா சோப்ரா என்ற கதாபாத்திரத்தின் மீது நாயகி சந்தேகப்படுகிறார், வில்லனும் அதன் மீது ஆசைப்படுகிறார் என்பதுதான் படத்தின் மெயின் சப்ஜெக்ட். ஆகையால் அந்தக் கதாபாத்திரத்துக்கு ‘அவ்வை சண்முகி’ மாதிரி மேக்கப் அளவுக்கு மெனக்கெடல் வேண்டும் என்றேன். ரசிகர்கள் பார்க்கும்போது ஏதோ ஒரு மெனக்கெடல் இருக்கிறது என தோன்ற வேண்டும்.
‘அவ்வை சண்முகி’ படம் ஒரு குழந்தைக்காக அப்பா, பெண் வேடமிட்டு செல்வதுதான் கதை. அதற்காக மேக்கப்புக்கு மெனக்கெட்டார்கள். படம் பெரிய ஹிட். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் மெயின் கதை என்பதால் இதற்கு மேக்கப்புக்கு மெனக்கெட வேண்டும் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. படம் தோல்வியடைந்துவிட்டது.
முதல் நாள் படப்பிடிப்பிலேயே படம் ஃப்ளாப் என்பதை யூகித்துவிடுவேன். சில படங்கள் ஹிட்டாகும் என்று நினைத்து பண்ணுவேன். ஆனால் சுமாராக போகும், ஃப்ளாப் ஆகாது. ஒரு படத்துக்கு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிவிட்டுதான் படப்பிடிப்புக்கு செல்கிறோம். கதையாக கேட்கும்போது சிரிப்பு வரும். ஆனால், படமாக்கும் இடம், விதம் எல்லாம் சேர்ந்து தான் திரையில் சிரிப்பை வரவைக்கும். அது சரியாக இல்லாதபோது கேட்டால், இவ்வளவுதான் பண்ண முடியும் என்பார்கள். அந்தச் சமயத்தில் ஒப்பந்தம், அட்வான்ஸ் எல்லாம் வாங்கிவிட்டதால், படத்தை முடித்துவிட்டு வெளியே வருவதுதான் சிறந்தது” என்று என்று சந்தானம் கூறினார்.