அல்லு அர்ஜுன் படம் தாமதமாவதால், வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் த்ரிவிக்ரம்.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. இப்படம் வரலாற்று கதையொன்றை பின்னணியாக கொண்டது எனவும், பெரும் பொருட்செலவில் இது உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அட்லி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் அல்லு அர்ஜுன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனால், த்ரிவிக்ரம் படம் மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கணக்கில் கொண்டு அல்லு அர்ஜுன் படத்துக்கு முன்பாக, வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார் த்ரிவிக்ரம். இதனை ஹரிகா அண்ட் ஹாசினி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளார். இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.