சென்னை: அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி தெரிவித்தார்.
தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. ‘உயிருள்ள வரை உஷா’, ‘தங்கைக்கோர் கீதம்’, ‘நூறாவது நாள்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை பல்வேறு குணச்சித்திர வேடங்களில் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட நளினி தொடர்ந்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்குச் சென்ற நளினி அங்கு வழிபாடு நடத்தினார். பின்னர் கோயில் வளாகத்தில் நின்று மடிப்பிச்சை ஏந்தினார். பின்னர் அதில் கிடைத்த பணத்தை கோயில் திருப்பணிக்கு கண்ணீர் மல்க காணிக்கையாக செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகின.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளினி, “அம்மனுக்காக இன்று நான் மடிப்பிச்சை எடுக்கிறேன். அதுவும் அம்மனே என்னிடம் கனவில் வந்து சொல்லி நான் எடுக்கிறேன். நம்பியவர்களுக்கு அம்மன் கூடவே வருவார். நாம் தூங்கும்போது கூட அவருடைய பாதம் நம்மை சுற்றி நடந்து போவதைப் போல இருக்கும்” என்று தெரிவித்தார்.