“ஆண்மையுள்ள ஒருவன் ஒருபோதும் கலவரமான உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியைத் தரும் பெண்ணை நோக்கியே செல்லும்” என்று ரவி மோகனுடன் தான் இருக்கும் புகைப்படங்கள் பற்றிய சர்ச்சை குறித்து சூசகமாக ஒரு விளகத்தை கொடுத்துள்ளார் பாடகி கெனிஷா.
ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணமே பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்த்தி ரவி. இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.
இதனிடையே, யாரையும் குறிப்பிடாமல் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் பதிவொன்றை வெளியிட்டார். அதில் “ஆண்மையுள்ள ஒருவன் ஒருபோதும் கலவரமான உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியைத் தரும் பெண்ணை நோக்கியே செல்லும். அந்த மென்மை நடிப்பல்ல, அது அமைதியின் வலிமை. அந்த மென்மையானவள் அவன் வலிமையுடன் எப்போதும் போட்டியிடமாட்டாள். மாறாக, அதை சமநிலைப்படுத்துவாள். அந்தப் பிணைப்பில் இருவரும் ஒருவருக்கொருவர் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதோடு, தங்கள் சுயத்தையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பதிவினைத் தொடர்ந்து கெனிஷாவிடம் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக, “யாராவது எனக்கு வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அதை என் முகத்துக்கு நேராகச் சொல்ல முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எந்த அளவு தைரியம் இருக்கிறதென்று பார்க்கலாம். உங்கள் மக்கள் தொடர்பை பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் உங்கள் விருப்பம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
ஆனால், உங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்குக் கவனம் தராமல் அலறிக் கொண்டிருக்கும் பெண்களே, தயவு செய்து கொஞ்சம் பெண்ணாக யோசியுங்களேன். உங்கள் சப்தம், இப்போது உங்களுக்கு மக்களின் கவனம் தேவை என்பதையே கூறுகிறது. மீதமுள்ள 9,99,999,9999 அனைவருக்கும்… உங்களுக்கு அமைதியும், அன்பும், அன்பான அணைப்புகள் உரித்தாகட்டும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் கெனிஷா.