விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தை ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படம் ஜூலை 4-ல் வெளியாக இருக்கிறது.
இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் டி. சிவா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், நடிகை தேவதர்ஷினி, இயக்குநர் பாண்டிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, “2019-ம் ஆண்டு, அனல் அரசு எனக்கு ஒரு கதையை சொன்னார். அப்போது அதைப் பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்தக் கதையில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று கேட்டார். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் மகனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை என் குடும்பத்தில் எப்போதும் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களில் அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது பாக்கியம் என்று நினைக்கிறேன்” என்றார்.