அடுத்ததாக ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரீ-ரிலீஸிலும் வெற்றியடைந்தது தொடர்பாக விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
தற்போது ‘கில்லி’ படத்தைத் தொடர்ந்து, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்களையும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்களாகும். குறிப்பாக ‘குஷி’ படத்தின் பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் ‘சிவகாசி’ படமும் கமர்ஷியலாக பெரிய வெற்றியை விஜய்க்கு பெற்றுக் கொடுத்தது.
ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படத்தின் மறுவெளியீட்டுப் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.