சென்னை: 10, 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நாளை (மே 16) வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் பொதுத் தேர்வை 11-ம் வகுப்பில் சுமார் 8 லட்சம் மாணவர்களும், 10-ம் வகுப்பில் 9 லட்சம் மாணவர்களும் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 80-க்கும் மேலான முகாம்களில் ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நாளை (மே 16) வெளியாக உள்ளன. இவற்றை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார்.
அதன்படி பத்தாம் வகுப்புக்கு காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதை www.tnresults.nic.in, ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அதேபோல், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.