சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அந்நகலை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14 (இன்று) பிற்பகல் முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தின் இரு நகல்கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்றும் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய மாவட்டங்கள்: மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்து கட்டணத்தையும் பணமாக அங்கேயே செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.