பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மைசூருவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பரிசும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 10 மற்றும் 12ம் வகுப்பின் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், தமிழ் குடும்பத்தினருக்கு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மைசூரு தமிழ்ச் சங்க தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பூர் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் அனிதா கிருஷ்ண மூர்த்தி, சாம் ராஜ் நகர காவல் ஆய்வாளர் சாகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மைசூருவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுதவிர தமிழ்க் குடும்பங்களை சேர்ந்த 57 மாணவர்களுக்கு சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. மைசூருவில் இயங்கி வரும் அரசு தமிழ் பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பட்டது.
இதையடுத்து தமிழ் குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்கு தனித்தனியாக இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
இந்த நிகழ்வு குறித்து மைசூரு தமிழ்ச் சங்க செயலாளர் ரகுபதி கூறுகையில், “கர்நாடக மாநிலம் மைசூருவில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தமிழர்களிடையே ஒற்றுமையும், முன்னேற்றமும் ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்ச் சங்கம் இயங்கி வருகிறது.
இங்குள்ள அரசு தமிழ்ப் பள்ளியை எங்களது சங்கம் தத்தெடுத்து, நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கு தமிழர்களிடையே வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்” என்றார்.