சென்னை: முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேசிய அளவில் முன்னிலையில் உள்ள ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வில் (Common Admission Test-CAT) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் நவம்பர் 30-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்துகிறது. காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும்.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ல் தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் எனும் வலைதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.1,300, மற்ற தேர்வர்கள் ரூ.2,600 செலுத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.தேர்வு முடிவுகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.