சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு சுற்றுகள் மூலம் 91,365 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3-வது சுற்று கலந்தாய்வு இன்று (வியாழன்) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
கட்-ஆஃப் மதிப்பெண் 143 முதல் 77.5 வரை பெற்றுள்ள மாணவர்கள் இக்கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். அவர்கள் 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு 10-ம் தேதி காலை 10 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதையடுத்து, 12-ம் தேதி காலை 10 மணிக்குள் அவர்களுக்கான இறுதி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள 1,110 இடங்கள், எம்ஐடியில் 750 இடங்கள், அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரியில் 550 இடங்கள், கட்டிக்கலை கல்லூரியில் 120 இடங்கள் உள்ள நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.