சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது.
இதை தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 2-வது சுற்று கலந்தாய்வு, இணைய வழியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த சுற்று 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள கட்-ஆப் மதிப்பெண் 178.965 முதல் 143.085 வரை எடுத்துள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
29-ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை அவர்கள் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, 31-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.