சென்னை: பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான குறும்படப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலை மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: பருவநிலை மாற்றம், துரித நகர வளர்ச்சி காரணமாக இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். மத்திய உள்துறையின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், ‘பேரிடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் குறும்படம் அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குறும்படம் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே தொழில்நுட்ப வசதிகளை கொண்டு படைப்பாற்றலை ஊக்குவிப்பது, பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் அபாய தணிப்பு தயார் நிலை, தடுப்பு நவடிக்கை,
மீள்தல் எனும் தலைப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் படங்களை தயாரிக்கலாம்.
அதன் நீளம் 2 முதல் 3 நிமிடங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். தங்கள் படைப்புகளை மாணவர்கள், வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் www.ndma.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இந்த போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.