புதுச்சேரி: விரைவில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பை மற்றும் ஷூ வழங்கப்படும். மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச சிறப்பு புத்தகம் வழங்கப்படும் என்று புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி சந்தை புதுகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று மாணவர்களுக்கு மிதி வண்டியினை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “மாணவர்கள் அரசு வழங்கும் உதவிகளை பெற்று சிறப்பாக படிக்க வேண்டும். விரைவில் மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் ஷூ வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறனை அதிகப்படுத்துவதற்கும் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கும் கல்வித் துறை சார்பில் தனி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் விரைவில் முதல்வர் கையால் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.