சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்.17-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி முடிவடையும். அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடையும்.
இதுதவிர தேசிய கல்விக் கொள்கையின்படி பத்தாம் வகுப்புக்கு மட்டும் நடப்பாண்டு முதல் இரு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக பிப்ரவரி மாதமும், 2-ம் கட்டமாக மே மாதமும் தேர்வுகள் நடைபெறும்.
அந்த வகையில் 10-ம் வகுப்புக்கான 2-ம் கட்ட பொதுத் தேர்வு மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறும். ஒட்டுமொத்தமாக இந்த தேர்வுகளை சுமார் 45 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.
ஒவ்வொரு பாடத் தேர்வு நடைபெற்று முடிந்த 10 நாட்களில் அதற்குரிய விடைத்தாள்கள் திருத்துதல் பணிகள் தொடங்கும். விரிவான தேர்வு கால அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷவ்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.