சென்னை: பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘டிஎன் ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிதாக தேர்வான 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் மொழி, கணித திறன் மேம்பாட்டுக்காக, ‘திறன்’ (THIRAN-Targeted Help for Improving Remediation and Academic Nurturing) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிட்டார்.
புதிய பாடத் திட்ட நூல்கள்: மாணவர்களுக்கு கணினிசார் அடிப்படை அறிவியல், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறனை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட் டுள்ள TN SPARK (TamilNadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய திட்டத்தின் பாட நூல்களையும் வெளி யிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: பள்ளிக்கல்வி துறை வரலாற்றில் முதல்முறையாக மலைப் பகுதிகளில் காலி பணியிடமே இல்லை என்று கூறும் அளவுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடக்க கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.
கல்விக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு நமக்கு சுமையை ஏற்படுத்திய போதிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்காதபடி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசிரியர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ‘‘பள்ளி பருவத்திலேயே கோடிங், ஏஐ, ஆன்லைன் டூல்ஸ் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம், நாட்டுக்கே வழிகாட்டி திட்டமாக இருக்கும்’’ என்றார்.
முதல்வர் வாழ்த்து செய்தி: புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடக்க கல்வித் துறையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2,457 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.