சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக வகுப்புக்கு வருகை தந்தனர்.
பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும், கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், வெயில் பாதிப்பு பெரிதாக இல்லாததால் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளக்கு வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கப்படுவது வரை அவர்கள் தங்களின் பழைய பஸ் பாஸ் மற்றும் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.