சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப். 10-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் இன்றுடன் (செப். 26) முடிவடைகின்றன. சில வகுப்புகளுக்கான தேர்வுகள் நேற்றே முடிந்துவிட்டன. இதையடுத்து, மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நாளை (செப்.27) முதல் அக்.5-ம்
தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில்தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக். 6-ம் தேதி திறக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, காலாண்டு விடுமுறையில் ஆசிரியர்களை பணிக்கு வர வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியபோது, ‘‘காலாண்டு விடுமுறை நாட்களில் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முடிவை கைவிட்டு காலாண்டு தேர்வு விடுமுறையை முழுமையாக எடுத்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வழிசெய்ய வேண்டும்’’ என்றனர்.