சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து, 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்கள் கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டம் கடந்த ஆண்டு முதல் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது.
அதை தொடர்ந்து, இந்த மாதத்துக்கான கூட்டம் இன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதி, போதைப் பொருள் விழிப்புணர்வு, பள்ளி தூதுவர்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.