சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 645 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இத்தேர்வை 5 லட்சத்து 53,635 பேர் எழுத உள்ளனர்.
இத்தேர்வுக்கு 5 லட்சத்து 53,635 பேர் விண்ணப்பித்ததனர். அதில் ஒரேயொரு விண்ணப்பதாரரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டு மற்ற அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 188 தேர்வுக் கூடங்களில் 53,606 பேர் எழுதுகின்றனர். முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர். அந்த வகையில் தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 645 ஆக இருப்பதால் ஏறத்தாழ 6,500 பேர் மெயின் தேர்வுக்கு செல்வார்கள்.