நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் சரோஜா தலைமை வகித்தார். தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் பேராசிரியர் முனைவர். வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் போட்டிக்கு தயாராக வேண்டிய விதம், எழுதிப் பார்க்க வேண்டிய மாதிரித் தேர்வுகள் ஆகியவை பற்றி விளக்கமாக பேசினார்.
தனது உரையின்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக விடை அளித்த மாணவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு பயனுள்ள நூலான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கைடுகளை வழங்கினார்.
இது குறித்து பேராசிரியர் வெங்கடேசன் கூறியது: ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டி நூல் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரித்த நூல் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் போட்டித் தேர்வு பயிற்சியில் நீண்ட அனுபவம் பெற்றவர். நிறைய நூல்களை எழுதியவர். அவருடைய தயாரிப்பில் வந்திருக்கக்கூடிய நூல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.