சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. பொது பிரிவுக்கு ஆன்லைனிலும், சிறப்பு பிரிவுக்கு நேரடியாகவும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இது போக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
பிவிஎஸ்சி – ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புகளில் 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த மே 26-ம் தேதி தொடங்கி ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. பிவிஎஸ்சி – ஏஹெச் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 57 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிவிஎஸ்சி – ஏஹெச் படிப்பில் 45 இடங்கள், பி.டெக். படிப்புகளில் 8 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இந்நிலையில், பிவிஎஸ்சி – ஏஹெச் படிப்புக்கு பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in என்ற இணையதளம் வாயிலாக நாளை (ஜூலை 21) தொடங்குகிறது. 24-ம் தேதி காலை 10 மணி வரை படிப்பு மற்றும் கல்லூரி விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கல்லூரியில் இடங்கள் ஒதுக்கீடு ஆணை 26-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை மாதவரம் பால் பண்ணையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கூட்டரங்கில் 22-ம் தேதி தொடங்கி நேரடியாக நடைபெறுகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ம் தேதி நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்குவதால், மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரம் முன்னதாக வரவேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.