சென்னை: என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கல்வி உதவி தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய படிவங்கள் மற்றும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளை ஜூலை 15-ம் தேதிக்குள் முடித்திடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதில் 40% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, என்எம்எம்எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை துரிதமாக பதிவுசெய்ய வேண்டும்.
இல்லையெனில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பணி புரியும் பிரிவு எழுத்தர்கள் இயக்குநரகத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ந்து இந்த பணிகளை முடித்த பின்னரே அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.