திருச்சி: அறிவு, திறன், அணுகுமுறை, கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என திருச்சியில் நேற்று நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எஸ்.பி., பயிற்சி ஆட்சியர் உள்ளிட்டோர் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
நாட்டின் அதிகாரமிக்க உயரிய பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்பை வழங்கும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் `இந்து தமிழ் திசை- ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் பேசியது: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி என எந்தவொரு தேர்வாக இருந்தாலும் ஏன் அந்தத் தேர்வை நடத்துகின்றனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசின் நிர்வாகத் துறையில் 24 வகையான அரசு சேவைகளுக்கு ஒரே தேர்வாகயுபிஎஸ்சி உள்ளது.
அனைத்து சேவைகளிலும் தன்மை வேறுபட்டாலும், அதற்கு தேர்வாகக் கூடியவர்களுக்கு அறிவு, திறன், அணுகுமுறை (ஆட்டிட்யூட்) ஆகிய மூன்றும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். பர்சனாலிட்டி டெஸ்டில் ஆட்டிட்யூட்டை தான் அதிகம் சோதிப்பார்கள். அறிவு, திறன், அணுகுமுறை உள்ள நபர்கள் தான் அரசுப் பணிக்குத் தேவை. அப்படிப்பட்டவர்களை தான் பணிக்கு தேர்வு செய்வார்கள்.
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் கட்டுரை எழுதச் சொல்வார்கள். எழுத்துத்திறன் இருந்தால் தான் கட்டுரையை சிறப்பாக எழுத முடியும். முதல்நிலை தேர்வில் தேர்வான பலர் முதன்மை தேர்வில் தோல்வியடைய காரணம் எழுத்துத்திறனை வளர்த்துக் கொள்ளாததே. அறிவு என்பது கேட்டு, படித்து தெரிந்து கொள்வது.
எழுத்து என்பது திறன். திறனை வளர்க்க நாள்தோறும் எழுதி பழக வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிக்கும்போது ஆட்டிட்யூட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்வில் நேரம் மிக முக்கியம். நிறைய மரம் வெட்டுபவர் மரங்களை வெட்டு வதற்கு முன் தனது கோடாரியை நன்கு கூர்மைப் படுத்திய பிறகு தான் மரங்களை வெட்டத் தொடங்குவார்.
எனவே கிடைத்த நேரத்தில் நமது இலக்கை அடைய சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும். நானும் சாதாரண மாணவன்தான். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
கிங் மேக்கர்ஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் பேசும்போது, ‘பல மாவட்டங்களில் பல கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஓர் அற்புதமான உந்துசக்தியை உருவாக்கிய நிகழ்ச்சி ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி. வாழ்க்கையில் நாம் என்ன ஆக வேண்டும் என்ற இலக்கு வேண்டும். அந்த இலக்கை நோக்கி சரியான திட்டமிடல், கடின உழைப்புடன் நகர வேண்டும். கிங் மேக்கர்ஸ் அகாடமியில் படித்து நிகழாண்டு 125-வது ரேங்க் பெற்ற சரண்யா அதற்கு சரியான உதாரணம். யுபிஎஸ்சி தேர்வை பொறுத்தவரை என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற தயாராவோருக்கு நம்பிக்கை, துணிச்சல், தைரியம், போராட்ட குணம், விடாமுயற்சி வேண்டும். இவை இருந்தால் வெற்றி பெறலாம்’ என்றார்.
`இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, ‘தமிழகத்தில் நிகழாண்டு 54 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று உள்ளனர். கடந்த காலங்களைக்காட்டிலும் தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேர்ச்சி சதவீதமும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது போட்டித்தேர்வர்களுக்காக `இந்து தமிழ் திசை’ நடத்தும் நிகழ்ச்சிக்கு நம்பிக்கை, உத்வேகத்தை தரும் வகையில் அமைந்துள்ளது’ என்றார்.
திருச்சி மாவட்ட பயிற்சி ஆட்சியர் தீபிசனு பேசியது: `தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ எனும் திருக்குறளை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவது இயலாத காரியம் அல்ல. தேர்வுக்கு மிகவும் ஆர்வமுடன், ஈடுபாட்டுடன், நம்மால் முடியும் எனும் நம்பிக்கையுடன் தயாராக வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் சமீபத்திய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டும்.
தேர்வுக்கு தயாராவதை தள்ளிப் போடக்கூடாது. இன்றே, இப்போதே தயாராகத் தொடங்கிவிட வேண்டும். நேர்முகத் தேர்வில் உரையாடல் மூலம் நமது மனப்பான்மை, அணுகுமுறை, பிரச்சினைகளை நாம் அணுகும்விதம் குறித்து மதிப்பீடு செய்வார்கள். அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2024 யுபிஎஸ்சி தேர்வில் 125-வது ரேங்க் பெற்ற சரண்யா பேசியது: யுபிஎஸ்சி தேர்வுக்கு நாம் தயாரானால் டிஎன்பிஎஸ்சி உட்பட இதர அரசு வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது. இந்த தேர்வுக்கான பயிற்சி நம்மை நேர்மை, அறம் உள்ள மனிதராக மாற்றும்.
நமது ஆளுமை சிறப்பானதாக மாறியிருக்கும். யுபிஎஸ்சி தேர்வில் நான் 4-வது முயற்சியில் தேர்ச்சிபெற்று அகில இந்திய அளவில் 125-வது ரேங்க் பெற்றேன். இயல்பாக மற்ற பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இந்த தேர்வுக்கு தயாரானேன். முழு ஈடுபாட்டுடன் நாள்தோறும் பயிற்சி எடுக்க வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றே தீருவேன் எனும் சுயஉந்துதலுடன் இந்த தேர்வுக்கான பயிற்சிபெற வாருங்கள். பிறரது இழிசொல், பழிசொல்லுக்கு இடம்கொடுக்காதீர்கள். முதல்நிலைத் தேர்வு எழுத பொது அறிவுடன், அடிப்படை கணிதம், அடிப்படை ஆங்கில அறிவு இருந்தால் போதும். அதன்பிறகு பாடங்களை தேர்வு செய்து பயிற்சி எடுக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு எழுதி முடித்தவுடன் முதன்மை (மெயின்) தேர்வுக்கான தயாரிப்பை தொடங்கி விட வேண்டும்.
நேர்முகத் தேர்வில் நமக்கு தெரியாத கேள்விக்கு ஏதாவது பதில் கூறி சமாளிக்கலாம் என பதிலளிக்கக் கூடாது. தெரியவில்லை எனில் நேர்மையாக தெரியாது எனக் கூறிவிட வேண்டும். வெற்றிபெற்றால் நமது நாட்டில் எங்கும் பணி செய்வேன் எனும் தைரியமும், துணிச்சலும் வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ, மாணவிகள், பெற்றோரின் சந்தேகங்களுக்கு திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சரண்யா, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சத்யஸ்ரீ பூமிநாதன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.
நிகழாண்டு நிகழ்ச்சியிலும் மகன்களுடன் பங்கேற்ற தாய்: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் தனது மகன்கள் 6-வது படிக்கும் முகிலன், 2-வது படிக்கும் அகிலன் ஆகியோருடன் நிகழ்ச்சிக்கு வந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் இவர் தனது மகன்களுடன் பங்கேற்றார். அதேபோல நிகழாண்டும் பங்கேற்ற அவர், `இந்து தமிழ் திசை’ நடத்தும் வாசிப்போம் நேசிப்போம், உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது என்றார்.