ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்காணல் உள்ள பதவிகள்) நூலகர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்காணல் உடைய பதவிகள்) கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வில் கல்லூரி நூலகர் (சட்டம் மற்றும் உயர்கல்வி) பதவியில் 17 காலியிடங்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 5-ஏ-யில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இத்தேர்வில் 693 பேர் பங்கேற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.