சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
கடந்த 4-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது கடந்த 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாணவருக்கு… இதற்கிடையே, அகில இந்திய முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திருநெல்வேலி மாணவர் எஸ்.சூர்ய நாராயணன், அகில இந்திய அளவில் 27-வது இடம் பெற்றிருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.