சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுதவிர மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியை குறித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறை நடைமுறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் வேலை புத்தகம், ஆசிரியர்கள் வேலை புத்தகம் பயன்படுத்தும் விதம், மாணவர்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்பட வேண்டும். பயிற்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். எனவே, தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயணத் திட்டங்களை தயாரித்து ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.