காஞ்சிபுரம்: “உயர் கல்வி முடிக்கும் மாணவர்கள் சமூக முன்னேற்றதுக்கு ஏதாவது பங்காற்ற வேண்டும்” என்று முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி ஆண்டு விழா இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் முருககூத்தன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இறையன்பு பேசியது: “மாணவர்கள் உயர் கல்விக்கு வரும்போதுதான் ஒரு படிப்பை ஆழ்ந்து படிக்கின்றனர். பள்ளியில் பல்வேறு பாடங்களை படிக்கிறோம். ஆனால் உயர் கல்வியில் புலமை பெரும் வகையில் ஒரு குறிப்பிட்ட பாடத்தை ஆழ்ந்து படிக்கிறோம்.
உயர் கல்வியில் சிறந்து படிப்பவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக முடியும். பல நாடுகளுக்கு செல்வதால் கிடைத்த புகழைவிட கல்வி வளர்ச்சியால் கிடைத்த புகழ்தான் முக்கியமானது. கிரேக்கத்துக்கு பணத்தாலா புகழ் கிடைத்தது. அங்கு பல்வேறு தத்துவஞானிகள் தோன்றினர். கல்வியால்தான் கிரேக்கம் புகழ் பெற்றது. இந்த விழாவில் மாணவர்களை பார்க்கும்போது திருவிழாக் கூட்டத்தை பார்ப்பதுபோல் உள்ளது. திருவிழாக் கூட்டத்தில் ஏதாவது பேசிக் கொண்டு இருப்பார்கள் அதேபோல் இருக்கிறீர்கள்.
நீங்கள் உயர் கல்வி வரை வந்துவிட்டதால் உங்களுக்கு அதிகம் கூற வேண்டியதில்லை. உயர் கல்வி முடித்துவிட்டு வரும் மாணவர்கள் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வர வேண்டும்,” என்றார். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.