சென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்பட்டு வந்தது. இதனால், வெளியூர் மாணவர்கள் சென்னைக்கு வந்துசெல்லும் நிலை இருந்தது.
இந்த நிலையில், வெளியூர் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வை இணைய வழியில் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்று) முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும்.
பி.எட். படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்று, தங்களுக்கு விருப்பமான கல்லூரியைதேர்வு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன. மொத்தம் 3,545 பேர் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.